ஆகஸ்ட்-20:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பாக உலக புகைப்பட தின விழா போட்டிகள் மற்றும் கருத்தரங்கு அனுசரிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் -19ம் நாளை உலக புகைப்பட நாளாக உலகெங்கும் வாழும் புகைப்பட கலைஞர்களும், புகைப்பட ரசிகர்களும், புகைப்பட ஆர்வலர்களும் மகிழ்வோடு கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை சார்பாக உலக புகைப்பட தினத்தினை முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வானது இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை தலைவர் முனைவர் நீ.ஜான்சன் ஒருங்கிணைப்பில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதிப்புறு கர்னல் முனைவர் க.ரவி தலைமையில் நடைபெற்றது. இணையவழி கருத்தரங்கில் யுனெஸ்கோ (UNESCO)-வின் பேராசிரியர் முனைவர் காபர் சூஸ் மற்றும் அமெரிக்காவின் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிஸம், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்வர்னவேல் ஈஸ்வரன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினர். புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்வின் இறுதியாக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை உதவி பயிற்றுநர் திரு.மு.ஹரிபாஸ்கர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று புகைப்பட தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.


