
“நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை முடிந்தது” – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பு) தர்மச்செல்வன் பேசிய இந்த தாம் தூம் பேச்சு வைரலாகி, திமுக தலைமைக்கு தர்சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுவதாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிக்கட்சிகள் வரிந்துகட்டியுள்ளன. 27-ம் தேதி தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக-வின் செயற்குழு கூட்டம் நடந்தது.
சுமார் 25 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தான் தர்மச் செல்வன் இப்படிப் பேசி இருக்கிறார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளரான பி.என்.பி.இன்பசேகரனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாத ஆதங்கத்தில் அவரது ஆதரவாளர்களே இந்த வீடியோவை வைரலாக்கி இருக்கிறார்கள் என்றும், கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தடங்கம் சுப்பிரமணியின் ஆதரவாளர்கள் தான் இதை பரப்பி இருக்கிறார்கள் என்றும் திமுக வட்டாரத்தில் பலவாறாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தர்மச்செல்வனை அவசரமாக சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டு ‘புத்தி சொல்லி’ அனுப்பி இருக்கிறது திமுக தலைமை.
இது தொடர்பாக, சென்னையில் இருந்த தர்மச்செல்வனிடம் பேசினோம். “எனது மாவட்டத்துக்குள் பென்னாகரம், தருமபுரி தொகுதிகள் வருகிறது. 2021 தேர்தலில் பென்னாகரத்தில் 21 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்திலும், தருமபுரியில் 26 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்திலும் திமுக தோற்றுள்ளது. மக்களவை தேர்தலில் தருமபுரியில் திமுக வெற்றி பெற்றபோதும், பென்னாகரத்தில் 11 ஆயிரத்து 500 வாக்குகளும், தருமபுரியில் 13 ஆயிரத்து 500 வாக்குகளும் பாமக-வை விட திமுக-வுக்கு குறைவாகவே கிடைத்தது.
தருமபுரியின் 2 சட்டப் பேரவை தொகுதிகளில் கட்சி இப்படி பலவீனமடைந்துள்ள சூழலில் திமுக தலைவர் என்னை நம்பி பொறுப்பு வழங்கியுள்ளார். 2026 தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் என் தொகுதிகளின் வெற்றியை தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. இதை நோக்கமாக வைத்துத்தான் செயற்குழு கூட்டத்தில் பேசினேன். முன்னதாக, நிர்வாகிகளின் மனக் குமுறல்கள், கோரிக்கைகளை பற்றியெல்லாம் கேட்டேன்.

