
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும் போது, ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
ரெயிலில் கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு மலை ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதன்படி வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடைகிறது. ஊட்டி-கேத்தி இடையே ஒரு நாளைக்கு 3 முறை ‘ஜாய் ரைடு’ சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி சென்றடைகிறது.
அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. 2-வது சுற்று காலை 11.30 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கேத்தி சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு 1.10 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. 3-வது சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு ஊட்டியை வந்தடைகிறது. 2 சேவைகளிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், 2-ம் வகுப்பில் 130 இருக்கைகளுடனும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.